சபரிமலையில் பக்தர்கள் வருகை குறைந்ததால் வாழை விற்பனை சரிவு

கோவை திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது இதில் குறிப்பாக அதிக விலை கிடைக்கும் நேந்திரம் செவ்வாழை பூவன் உள்ளிட்ட ரகங்கள் இப்பகுதியில் சாகுபடி செய்யப்படுகின்றன. மூன்று மாவட்டங்களிலும் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படும் வாழைகளில் பிரதான இடத்தை பிடித்திருப்பது நேந்திரன் வாழை ஆகும். இந்த ரக வாழை சிப்ஸ் செய்ய ஏற்றது என்பதால் அண்டை மாநிலமான கேரளாவிற்குப் பெருமளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.

சபரிமலை மண்டல பூஜை காலத்தை ஒட்டி விளைச்சலைத் தரும் இந்த ரக வாழைகள் மூலம் சிப்ஸ் தயாரிப்பு தொழில் அமோகமாக நடந்து வருகிறது. நாடு முடிவதிலிருந்தும் சபரிமலை நோக்கி வரும் பக்தர்கள் சிப்ஸ் வாங்கி செல்வது இந்த வாழை விவசாயிகளை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவின் காரணமாகச் சபரிமலை உள்ளிட்ட கேரளாவின் முக்கிய தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் அங்கு வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். ஒரு கிலோ நேந்திரம் விலை சராசரியாக 25 முதல் 35 ரூபாயாக விற்கப்பட்ட நிலையில் சில நாட்களாக 8 ரூபாயிலிருந்து 18 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. செவ்வாழை ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இப்போது 20 முதல் 25 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இதே போல் மற்ற வாழைப்பழ வகைகளும் விலை சரிவைக் கண்டுள்ளன. இதனால் விவசாயிகள் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.