தடுப்பூசிகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்த உடன், உலகளாவிய டெண்டர் விடப்பட்டு, கோவிட் தடுப்பு மருந்து கொள்முதல் செய்துமக்களுக்கு போடப்படும் என்றது. பிறகு, தமிழக மக்கள் செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பு நோய் மருந்து தயாரிப்பு மையத்தை மாநில அரசே ஏற்று நடத்தும் என்றும், அங்கு கோவிட் தடுப்பு மருந்து அதிகளவில் தயாரிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்து, அந்த முயற்சி பயனளிக்கவில்லை. இதனால் தமிழக அரசு வெளிச்சந்தையில், தடுப்பு மருந்துகளை வாங்கி மக்களுக்கு அளிக்கும் என்று புதிய கதை ஒன்றை சொல்லியது. இப்படி தினமும் ஒரு அறிக்கை பேட்டி என மக்கள் இடையே பொய்யாக வாக்குறுதிகள் அளித்தததை தவிர வேறென்ன செய்தது இந்த அரசு.

தமிழக அரசிடம் தடுப்பூசி குறித்து சரியான திட்டமிடல் இல்லை. தடுப்பூசி செலுத்தப்படும் என்ற செய்தி வந்த உடன், மையங்களில் அதிகளவு மக்கள் விடியர்காலை முதல் மக்கள் கூடுகின்றனர். இதனால், தொற்று அதிகரிக்கும் சூழல் ஏற்படுகிறது.அந்த மக்களிடம், தடுப்பூசி எண்ணிக்கை குறித்து உண்மையை கூறாமல், மத்திய அரசின் மேல் சுலபமாக பழி சுமத்தி கடமையில் இருந்து திமுக அரசு தப்பித்து வருகிறது.

பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்த முன்வருவதை தவிர்க்க கடந்த 15 நாட்களாக தொற்று எண்ணிக்கையையும், இறப்பையும் திமுக அரசு குறைத்து காட்டுவதாக செய்திகள் வருகின்றன. இந்த அரசு மக்களுக்கு தடுப்பூசி வழங்காமல் விளையாட்டு காட்டுவதன் காரணம் புரியவில்லை.

2 நாட்களுக்கு முன்பு 30 டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பியதாக செய்திகள் வந்தன. ஆனால், அவைகள் முறையாக மக்களுக்கு செலுத்தப்பட்டதாக தகவல் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியை தவிர்த்து, கோவிட் தடுப்பு மருந்து விஷயத்தில் மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்துவதை விட்டு மக்களை காப்பாற்றும் பணியில் அரசு ஈடுபட வேண்டும்.

மத்திய அரசால், தமிழகத்திற்கு கடந்த இரண்டு மாதத்தில் எத்தனை லட்சம் தடுப்பூசிகள் தரப்பட்டது? அதில் எத்தனை பேருக்கு போடப்பட்டது? இன்னும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி எத்தனை பேருக்கு போடட்பட வேண்டும் என்பதையம், மத்திய அரசிடம் இருந்து வரும் தடுப்பூசிகள் மாவட்டங்கள் தோறும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பது பற்றியும், தடுப்பூசி முகாமில் யார் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது பற்றியும் திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.