ராகவேந்திரா மண்டபத்திற்கான வரி செலுத்தப்பட்டது- ரஜினி

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான 2ஆவது தவணை சொத்து வரியான 6 லட்சத்து 39 ஆயிரத்து 846 ரூபாயை, சென்னை மாநகராட்சியில் நடிகர் ரஜினிகாந்த் செலுத்தினார்.

நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமாக சென்னை கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இதற்கு, 2020-21ஆம் ஆண்டுக்கான அரையாண்டு சொத்து வரியாக, 6.50 லட்சம் ரூபாயை மாநகராட்சி விதித்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ரஜினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், “நோட்டீஸ் அனுப்பப்பட்ட 10 நாள்களில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளீர்கள். ஏன் அவசர அவசரமாக நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள். நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதற்காக அபராதம் விதிப்பேன்” என்றார்.இதனையடுத்த நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் வழக்கைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.