நாளை மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் ‘பொன்னியின் செல்வன்’ குழு

இயக்குநர் மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை மீண்டும் துவங்குவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மணி ரத்னம் தனது கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை 2 பாகங்களாக இயக்க திட்டமிட்டிருக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். படத்திர்கான இசையை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அமைக்கிறார். இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் உடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

இதன் படபிடிப்பு ஜனவரி 6-ம் தேதி அதாவது நாளை ஹைதராபாத்தில் மீண்டும் துவங்குகிறது. இதற்காக அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கோவிட் -19 சோதனை செய்யப்பட்டுள்ளது. கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் இன்னும் சில நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இயக்குநர் மணிரத்னம் சிறப்பாக செய்துள்ளாராம்.

‘பொன்னியன் செல்வன்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம், இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் ‘கோப்ரா’வில் பணிபுரிந்து வருவதால், அவர் அடுத்தகட்ட படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு நாளை தொடங்கும் ஷூட்டிங்கில் ஒரு பிரமாண்ட பாடலை படமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். இதற்காக பிருந்தா மாஸ்டரின் வழிகாட்டுதலின் கீழ், ஒத்திகையும் பார்க்கப்பட்டுள்ளதாம்.