எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தேர்தல் விதிமுறைகளை மீறியதாக புகார் கொடுக்கப்பட்டதையடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது எந்த அசாம்பவிதங்களும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் மற்றும் அதிரடி படையினர் தீவிர பாதுகாப்பு பணயில் ஈடுபட்டிருந்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றால் தொண்டாமுத்தூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கும் அ.தி.மு.கவினருக்கு இடையேயான மோதல், தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் அ.தி.மு.க எம்.பியுமான ரவீந்திரநாத் கார் கண்ணாடி உடைத்த சம்பவங்கள் நடந்தேறியது.

இதனிடையே  குனியமுத்தூர் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்றதாக தொண்டாமுத்தூர் தொகுதி மண்டல அலுவலர் ராஜா முகமது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் கட்சி கொடியுடன் காரில் சென்றதாகவும், அதிமுக கட்சி துண்டு அணிந்து சென்றதாகவும் அமைச்சர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை அடுத்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது  குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.