ஆன்லைனில் ரம்மி விளையாடியதை தாய் கண்டித்ததால் 14 வயது சிறுவன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கருமன்கூடல் பகுதியை சேர்ந்த ராஜகுமார் என்பவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா கருமன்கூடல் பகுதியில் உள்ள வீட்டில் 14 வயது மகன் சஜனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், சஜன் செல்போனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். ரம்மி விளையாடுவதற்காக தனது தாய், தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரது தாய் கீதாவோ மகன் சஜனை கண்டித்துள்ளார்.
மேலும் கீதா பணம் தர மறுக்கவே செல்போனை தூக்கி எறிந்துவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்ற சஜன் அருகே உள்ள வாழை தோப்பில் விஷமருந்தி, மயக்க நிலையில் மீட்கப்பட்டார். இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.