பள்ளி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது

பாலியல் புகாருக்கு உள்ளான மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் மகரிஷி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியை சேர்ந்த வணிகவியல் ஆசிரியரான ஆனந்தன் என்பவர் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூகவலைதளத்தில் புகார் எழுந்தது.

இதனையடுத்து ஆசிரியர் ஆனந்தனை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இந்த விவகாரத்தில் மாவட்ட குழந்தைகள் நல ஆணையம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.

மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் ஆனந்தன் மீது காவல்நிலையத்துக்கு தனிப்பட்ட புகார்கள் வராததால் இந்த வழக்கு விசாரணை தேக்கமடைந்தது. இந்நிலையில் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவி ஒருவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அப்பள்ளியில் பயின்ற போது ஆசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆனந்தனை போக்ஸோ கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.