கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை; டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம்

டெல்லியில் கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் கரோனா பாதிப்புகள் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முன்கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள இந்து ராவ் மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.

அவர்கள் முக கவசங்களை அணிந்தபடி தரையில் அமர்ந்தபடி, கைகளில் வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தியபடி தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி மருத்துவர் ஒருவர் கூறும்பொழுது, போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் நாங்கள் மேயரிடம் சம்பள விவகாரம் பற்றி முறையிட்டோம். ஆனால் அதற்கு அவர் வடக்கு டெல்லி மாநகராட்சியில் பணம் இல்லை என கூறி விட்டார். எங்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என வருத்தமுடன் கூறினார்.