எதிரியே இல்லாத தேர்தலை மோடி சந்திப்பார்- ராகவன்

எதிரியே இல்லை என்ற சூழலில் லோக்சபா தேர்தலை மோடி சந்திப்பார் என மாநில பா.ஜ. பொதுச் செயலர் ராகவன் பேசினார்.

விழுப்புரத்தில் நேற்று நடந்த பா.ஜ. செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது: நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் மத்தியில் பா.ஜ. நல்ல வளர்ச்சி அடைந்திருப்பது தெரிகிறது. மேலும் பா.ஜ.வின் வளர்ச்சியை மற்ற கட்சிகளுக்கும் நாம் நிரூபித்துகாட்ட வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ. தன் பலத்தை நிச்சயமாக நிரூபிக்கும்.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் தான் பா.ஜ. நான்கு இடங்களில் வென்றதாக சிலர் கூறுகின்றனர். தி.மு.க.வும் கூட்டணி வைத்துதான் தேர்தலை சந்தித்தது. நிச்சயமாக விரைவில் தமிழகத்தில் பா.ஜ.வின் தாமரை மலரும்.

வரும் 2024ம் ஆண்டில் எதிரியே இல்லை என்ற சூழலில் லோக்சபா தேர்தலை மோடி சந்திப்பார். நிர்வாகிகள் நமக்குள்ள நல்ல வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி மக்களிடம் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறவேண்டும். இவ்வாறு அவர்பேசினார்.