உர விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

உர விலை உயர்வக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், விவசாயிகள் வாழ்வுடன் மத்திய அரசு கண்ணாமூச்சி விளையாடுவதாகவும் கூறியுள்ளார்.

விவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றும் வகையில் 58 சதவீத உரவிலை உயர்வின் மூலம், 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையின் விலையை ரூ.1,200-ல் இருந்து ரூ.1,900 ஆக செங்குத்தாக உயர்த்தியிருப்பதற்கும், சென்னையில் செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அராஜகமாக கலைத்திருப்பதற்கும் தி.மு.க. சார்பில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

போராடும் விவசாயிகளை அழைத்துப்பேசுவதற்கு கூட மனமில்லாத, மார்க்கம் தெரியாத, மனிதாபிமானமற்ற மத்திய பா.ஜ.க. அரசு, அவர்களின் எதிர்காலத்தை மேலும் பாழ்படுத்தும் வகையில் உரவிலையை அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த டி.ஏ.பி. உர விலை உயர்வைத் தொடர்ந்து என்.பி.கே. உரங்களின் விலையும் 50 சதவீதம் வரை உயர்ந்து, இன்றைக்கு நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. ஜனநாயக உரிமைகளுக்காக, தங்களின் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு விவசாயிகளை பிரதமர் நரேந்திரமோடி பழிவாங்குவது நியாயமல்ல.