யாரையும் வெளியேற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை- அமைச்சர் சேகர்பாபு

கோயில்களில் அர்ச்சகர்களாக உள்ள யாரையும் வெளியேற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை, சட்டமீறல் ஏதும் இல்லை , மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.நிருபர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

அனைவரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் முறையாக பயிற்சி பெற்ற 58 பேர் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

யாரும் முன்னுக்கு வரக்கூடாது என சிலர் விஷமதனமாக பிரசாரம் செய்கின்றனர். ஏற்கனவே கோயில்களில், அர்ச்சகராக உள்ள யாரையும் வெளியேற்றும் திட்டமில்லை.

எந்த கோயிலிலும் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை.பல ஆண்டுகள் பணிபுரிந்து, வயது மூப்பிற்கு பிறகும், பலர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் வெளியேற்றப்படவில்லை. தொடர்ந்து பணிபுரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

எந்த தவறுக்கும் இடம் தர மாட்டோம். 58 பேர் நியமனம் காரணமாக யாரும் பணி இழந்திருந்தால் எங்களிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுத்து மாற்றுப்பணி தரப்படும்