Minister Raja Kannappan: பொது வேலைநிறுத்தத்தின்போது பஸ்களை வழக்கம்போல் இயக்க நடவடிக்கை- அமைச்சர் ராஜகண்ணப்பன்

minister-raja-kannappan-says-buses-run
அமைச்சர் ராஜகண்ணப்பன்

Minister Raja Kannappan: தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பாதிப்பு இல்லை. தமிழக போக்குவரத்துதுறை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் இருந்து அந்தந்த போக்குவரத்து பணிமனைகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நேரடியாக சில்லரை விற்பனையில் டீசல் கொள்முதல் செய்து நிரப்பப்படுகிறது.

இதனால் தமிழக அரசுக்கு மாதத்துக்கு ரூ.3½ கோடி லாபம் ஈட்டப்படுகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அந்தந்த பெட்ரோல் நிலையங்களுக்கு பஸ்கள் சென்று பெட்ரோல் நிரப்பியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இலவச பஸ் பயண சலுகை அறிவிப்புக்கு பிறகு அரசு பஸ்களில் பெண் பயணிகள் வருகை 40 சதவீதம் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது 62 சதவீத பெண்கள் அரசு பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த திட்டம் மூலம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் வாக்கு அதிகளவு தி.மு.க.விற்கு வாக்களித்துள்ளனர். தற்போதைய நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்து துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு போக்குவரத்து துறை, போலீசார் மூலம் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறும் மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் கிராம புறங்களில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 14 ஆயிரம் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் 18 ஆயிரத்து 177 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதனை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர். இந்த போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கும் அதே நேரத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடக்கும் 2 நாட்களும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: Battery bike exploded: எலக்ட்ரானிக் பைக் பேட்டரி வெடித்து தந்தை-மகள் உயிரிழப்பு