தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?

இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கொரோனா கால நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம் தொகை, 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் நடைபெற்றது.

இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நிவாரண உதவிகளை அர்ச்சகர்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பத்து, பதினொன்றாம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பள்ளிக்கல்வித்துறையிடம் உள்ளது. எனவே அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எளிதானது. அந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டு விரைவாக அறிவிப்பு வெளியிடப்படும்.

கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. மூன்றாவது அலை வரும் என சிலர் கூறுகிறார்கள். எனவே ஐ.சி.எம்.ஆரின் வழிகாட்டல்கள், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து அதன் பின்பு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.