1 – 12 வரை மீண்டும் பள்ளிகள் திறப்பு

1 - 12 வரை மீண்டும் பள்ளிகள் திறப்பு
1 - 12 வரை மீண்டும் பள்ளிகள் திறப்பு

மஹாராஷ்டிர மாநிலத்தில், கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவிலேயே, கொரோனா வைரஸ் முதல் அலை மற்றும் இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மஹாராஷ்டிரா. அங்கு தான் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம். தற்போது தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் காரணமாக, கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையாலும் மஹாராஷ்டிர மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும், பொது இடங்களில், கூட்டமாக கூடுவதற்கு தடை போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.

இதற்கிடையே மஹாராஷ்வடிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், ஜனவரி மாதம் 24 ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என மாநில கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்திருந்தார்.

இதன்படி, மஹாராஷ்டிர மாநிலம் முழுவதும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளுக்கு வரும்படி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், பெற்றோர்கள் விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிபிஎஸ்சி 10-12 தேர்வு முடிவுகள் எப்போது?