பாஜக ஒரு தலித் விரோத கட்சி: கே.எஸ்.அழகிரி

பாஜக ஒரு தலித் விரோத கட்சி என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்துவோம் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்திரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் கிராமத்தை சேர்ந்த தலித் பெண்ணின் தாயாரை சந்தித்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஆறுதல் கூறிய காட்சிகள் நாட்டுமக்களின் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. பிரியங்கா காந்தியை பெண்ணின் தாயார் கட்டி தழுவி கதறி அழுதார். “எங்களுக்கு எங்கே நீதி கிடைக்க போகிறது, என் மகளை பலாத்காரத்திற்கு பலியாக்கிவிட்டேன்” என்று கூறியபோது “உங்கள் மகளுக்கு நீதி கிடைக்க கடைசிவரை போராடுவோம்” என்று ராகுலும், பிரியங்காவும் கூறியது அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது.

ஒடுக்கப்பட்ட மக்கள் எப்போது பாதிக்கப்படுகிறார்களோ, அவர்களுக்காக குரல்கொடுக்க, ஆறுதல் கூற வருகிற பாரம்பரியத்தில் வந்தவர்கள் என்பதை ராகுலும், பிரியங்காவும் நிரூபித்திருக்கிறார்கள்.

எனவே, பாலியல் பலாத்காரத்திற்கு பலியான அப்பாவி பெண்ணிற்கு நீதி கேட்கிற போராட்டம் வெற்றிபெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்படி மாவட்ட காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் கட்சியினரையும் கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் பாஜக ஒரு தலித் விரோத கட்சி என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்துவோம், பாதிக்கப்பட்டு தலித் பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.