சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் அந்த நாட்டின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
ஜமால் கஷோகி கொலையில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென கஷோகியின் காதலி ஹேட்டீஸ் செங்கிஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘குற்றமற்ற மற்றும் அப்பாவியான ஒருவரை கொடூரமாக கொலை செய்ய உத்தரவிட்ட பட்டத்து இளவரசர் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டியது அவசியம். அவர் தண்டிக்கப்படாவிட்டால் அது என்றென்றும் நம் அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
நமது மனித குலத்துக்கு ஒரு கறையாக இருக்கும். இது நாம் தேடும் நீதியைக் கொண்டு வருவது மட்டுமல்லாமல் இது போன்ற செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் முடியும்’’ என தெரிவித்துள்ளார்.