மாரியப்பன் தங்கவேலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கப் பதக்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றது. ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஆகஸ்டு 24ந்தேதி தொடங்குகிறது. இந்தியாவின் சார்பில் 40 ஆண்கள் 14 பெண்கள் கொண்ட அணியினர் ஜப்பானுக்கு செல்கின்றனர். இந்திய அணிக்கு தமிழ்நாட்டின் சேலம் மாவட்டதைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள மாரியப்பனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘டோக்கியோவில் நடக்கவிருக்கும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு இந்திய வீரர்களின் அணி பயணப்படுகிறது. அவ்வணியின் தலைவராகக் கொடியேந்திச்செல்லவிருப்பவர் நம் மாரியப்பன் தங்கவேலு. பெருமையோடு வாழ்த்திவிட்டுக் காத்திருப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.