ஜெயங்கொண்டத்தில் ஹிந்தி தெரியவில்லை என்றால் லோன் தர மாட்டேன் என்று ஓய்வுபெற்ற மருத்துவருக்கு கடன் இல்லை என விண்ணப்பத்தை நிராகரித்த வங்கி மேலாளரிடத்தில் மான நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மருத்துவத்துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். சுற்றுவட்டாரத்தில் பல்வேறு இடங்களில் பாலசுப்பிரமணியத்துக்கு சொந்தமாக நிலம், வீடுகள் ஆகியவை உள்ளன.
இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்த பாலசுப்பிரமணியம் கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோன் கேட்டு சென்றுள்ளார். இந்த வங்கியில் தான் பாலசுப்பிரமணியன் கணக்கும் வைத்துள்ளார்.
வங்கியில் தற்போது மகாராஷ்டிராவை சேர்ந்த விஷால் காம்ப்ளே என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரிடத்தில் சென்ற பாலசுப்பிரமணியன் தனது இடம் சம்பந்தமான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து தேவை குறித்து பேசியுள்ளார்.
பிறகு நடந்த சம்பவங்கள் குறித்து பாலசுப்பிரமணியன் கூறியதாவது, என்னிடத்தில் பேசிய வங்கி மேலாளர் விஷால் காம்ப்ளே, ‘டூ யூ நோ ஹிந்தி’ என ஆங்கிலத்தில் கேட்டார். அதற்கு நான் ‘ஐ டோன்ட் நோ ஹிந்தி பட் ஐ நோ தமிழ் அண்ட் இங்கிலீஷ்’ என ஆங்கிலத்தில் கூறினேன். அதற்கு பதிலளித்த வங்கி மேலாளர், ‘ஐ அம் மகாராஷ்டிரா ஹிந்தி’ ‘லாங்குவேஜ் ப்ராப்லம்’ என திருப்பி கூறினார்.
மருத்துவர் மீண்டும் கடன் தொடர்பாக பேசிய போது, வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழிப் பிரச்சினை பற்றிய என்னிடம் பேசினார் கடன் சம்பந்தமான ஆவணங்கள் பார்க்காமல் கடன் கொடுக்க இயலாது என நிராகரித்தார் என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் வாழும் நான் இந்தி தெரியாத காரணத்தினால் என்னால் வங்கியில் லோன் பெற முடியவில்லை என்று டாக்டர் சுப்பிரமணியம் வருத்தத்துடன் கூறினார்.
தற்போது டாக்டர் சுப்பிரமணியம் மொழிப் பிரச்சினை காரணமாக அடிப்படை உரிமையை மறுத்து கடன் தர மறுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி வங்கி மேலாளர் விஷால் காம்ப்ளேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளர் விஷாலிடம் தொலைபேசி வாயிலாக விளக்கம் கேட்டதற்கு என்னிடத்தில் நிறைய பேர் லோன் கேட்டு வருகிறார்கள் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எனக்கு நினைக்கவில்லை என்று குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.