பிரிட்டன் – ஜப்பான் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

 ஜப்பான் நாட்டுடனான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை பிரிட்டன் அரசு மேற்கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறவுள்ளதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி இந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறவுள்ளது.

இந்நிலையில், ஜப்பான் நாட்டுடனான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை பிரிட்டன் அரசு மேற்கொண்டுள்ளது. ஜப்பானுடனான இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை 15 பில்லியன் பவுண்டுகள் வரை உயர்த்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பான் ஏற்கனவே சுமார் 1.5 டிரில்லியன் யென் (14 பில்லியன் டாலர்) மதிப்பிலான பொருள்களை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்கிறது. பெரும்பாலும் வாகன பாகங்கள், பிற இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்களே அந்நாட்டால் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதே நேரத்தில் பிரிட்டனில் இருந்து ஒரு டிரில்லியன் யென் (9.5 பில்லியன் டாலர்) மதிப்புள்ள மருத்துவப் பொருள்கள், கார்கள் ஆகியவை ஜப்பானில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்தப் புதிய ஒப்பந்தத்தின்படி ஜப்பானிய வாகனங்கள் மீதான வரி படிப்படியாக குறைக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டு பூஜ்ஜியமாக்கப்படும். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துடனும் ஜப்பான் இதேபோன்ற ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறவுள்ளதாக அறிவித்த பின், அந்நாடு மேற்கொள்ளும் முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும்.