வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

செப்டம்பர் 27ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறினார்.

இதுதொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் உள்ள பெரியாறு பங்கீட்டு நீர் மற்றும் பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள கண்மாய்களின் நீர் இருப்பும் சேர்த்து 6,000 மி.க.அடி தண்ணீர் இருந்தால் பெரியாறு பாசனப் பகுதியில், ஒருபோக பாசன நிலங்களுக்கு, திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் சேர்த்து பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்.

இதன்படி, பெரியாறு வைகைப் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கக்கோரி விவசாயிகளிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, பெரியாறு பாசனப் பகுதியில் ஒருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து வரும் 27ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், மதுரை, திண்டுக்கல் மட்ற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.