மதுரையில் ரூ.10க்கு டீ-சர்ட் விற்பனை

மதுரையில் 10 ரூபாய்க்கு டீ-சர்ட் விற்பனை என்ற விளம்பரத்தால் ஜவுளிக் கடையில் மக்கள் அதிகளவில் கூடினர். கொரோனா விதிகளை பின்பற்றாததால் கடையை காவல்துறையினர் பூட்டிவிட்டுச் சென்றனர்.

மதுரை கோ.புதூரில் உள்ள ஜவுளிக்கடை தங்களது இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சலுகை விலையில் துணிகளை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்தது. அதன்படி, சட்டை, டீ-சர்ட் உள்ளிட்டவற்றை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அறிவித்திருந்தது.

இதனையறிந்த அப்பகுதி மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து துணிகளை வாங்கி சென்றனர். தனிமனித இடைவெளி போன்ற கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இருப்பது தெரியவந்தது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து அரசின் விதிகளை முறையாக பின்பற்றவில்லை என உரிமையாளரை எச்சரித்த காவல்துறையினர், கடையை பூட்டிவிட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க: 4ஜி சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல்