‘அமெரிக்க அதிபராக ஆட்சி செய்வேன்’ – ஜோ பிடன் நம்பிக்கை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை 264 வாக்குகளை பெற்றுள்ள ஜோ பிடன், நான் நிச்சயமாக வெள்ளை மாளிகையில் ஆட்சி செய்வேன் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் யார் என்பதில், ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், முக்கிய மாகாணங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. அதில், மிச்சிகன் மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்ற நிலையில் மற்ற 8 மாகாணங்களில் தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஜோ பிடன் 264 தேர்தல் சபை வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். ட்ரம்ப் 214 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

இதுகுறித்து ஜோ பிடன் கூறுகையில், “நான் வெற்றியை அறிவிக்க இங்கு வரவில்லை. ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், நாங்கள்தான் வெற்றியாளர்களாக இருப்போம் என்று நம்புகிறோம். நான் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று ஆட்சி செய்கையில், சிவப்பு மற்றும் நீல மாகாணங்கள் என்ற பிரிவினை இருக்காது. அமெரிக்கா மட்டுமே இடம்பெற்றிருக்கும்” எனத் தெரிவித்தார்.

குறிப்பாக விஸ்கான்சின் மற்றும் மிச்சிகனில் வெற்றிகளைப் பதிவுசெய்த பிறகு, ஜோ பிடன் பேச்சில் ஒரு தெளிவு ஏற்பட்டுள்ளது. அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் வெற்றியை கொண்டாட தயாராகி வருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகளை பெற்றுள்ள அதிபர் வேட்பாளர் என்ற சாதனையை ஜனநாயக கட்சி ஜோ பிடன் பதிவு செய்வார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில், “பென்ஸில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் பிடனுக்கு ஆதரவான வாக்குகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. இது நம் நாட்டிற்கு மிகவும் ஆபத்தாகும்” எனப் பதிவிட்டிருந்தார்.