கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவன் வெட்டி கொலை

கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக் கட்டிய சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த கணவன் தனபாலை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார் அருள்சத்யா. தனது முடிவை கள்ளக்காதலன் மணிகண்டனிடம் தெரிவிக்க, அவரும் தனபாலை தீர்த்துக் கட்ட ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, கடந்த 9 ஆம் தேதி இரவு தனபால் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், கள்ளக்காதலன் மணிகண்டனுடன், அருள் சத்யாவும் சேர்ந்து தனபாலை தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த தனபாலை கத்தியால் குத்தி கொன்றுள்ளார் மணிகண்டன். கணவன் உயிரிழந்து விட்டதை உறுதி செய்த அருள் சத்யா, மணிகண்டனை யாருக்கும் தெரியாமல் அனுப்பி வைத்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் மனைவி சத்யாவிடம் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். முன்னுக்குப் பின் முரணாக பேசிய அருள் சத்யாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். தீவிர விசாரணையில் அருள் சத்யா அனைத்து உண்மைகளையும் போலீசாரிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அருள் சத்யா, அவரது கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.