ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் – புதுவை முதலமைச்சர் !

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் டாக்டர் அம்பேத்கர் அறிவுசார் மையத்தின் திறப்பு விழாவில் முதலமைச்சர் நாரயணசாமி , சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் இன்று பங்கேற்றனர்.

அப்போது பேசிய அவர் , அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கானத் தலைவர் மட்டுமல்ல. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கானத் தலைவர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் முழு கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் என்ற திட்டம் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளதுபோல, வறுமை கோட்டிற்கு கீழுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவ, மாணவிகளின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறுகையில், “புதுச்சேரி மக்களுக்கு எதிராக செயல்படுபவர்களை மாநிலத்தை விட்டு அனுப்பும் வகையில், வரும் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதிவரை நடைபெறவுள்ள போராட்டத்தில் ஈடுபட்டு தொழிற்சங்கங்கள் புதுச்சேரியை ஸ்தம்பிக்கச் செய்ய வேண்டும்.

கிரண்பேடிக்கு பகிரங்கமாக ஒரு சவால் விடுகிறேன். புதுச்சேரியில் ஒரு தொகுதியில் நின்று கிரண்பேடியால் ஜெயிக்க முடியுமா? டெபாசிட் வாங்க மாட்டார். ஏனாமில் போட்டியிட்டால் ஒரு வாக்குகூடக் கிடைக்காது.” என்றார்.