பிரபல கிரிக்கெட் வீரர் காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் பந்துல வர்ணபுர காலமானார். அவருக்கு வயது 68.இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் பந்துல வர்ணபுர உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த வாரம் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தார்.அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற தகவல் பரவியது. ஆனால், மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியானது.

அவரின் வலது காலை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பந்துல வர்ணபுரா சம்மதிக்கவில்லை.

ஆனாலும், அகற்றியே ஆகவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பந்துல வர்ணபுர இன்று (18ம் தேதி) காலமானார். அவர் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக இருந்த பந்துல வர்ணபுர, இலங்கை அணியின் பயிற்சியாளராகவும், இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

பந்துல வர்ணபுர மறைவுக்கு இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்