முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19-ந்தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியில் பிரசாரம் தொடங்கினார். இதையடுத்து அ.தி.மு.க.வின் பிரசாரம் முறைப்படி 27-ந்தேதி தொடங்கியது. சென்னையில் நடந்த பிரசார தொடக்க நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.
அதன்பின்னர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29ம் தேதி முதல் 6 நாட்கள் சூறாவளி பிரசாரத்தை நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கினார். அப்போது அவர் பொதுக்கூட்டம், வீடு, வீடாக வாக்காளர்களை சந்தித்தல், தொழில் அதிபர்கள், வியாபாரிகள், பிரமுகர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மீனவர்களுடன் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.
நாமக்கல் மாவட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு நேற்று திருச்சியில் பிரச்சாரம் செய்தார். இன்று இரண்டாவது நாளாக திருச்சியில் பிரசாரம் செய்கிறார்.
முன்னதாக இன்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவில் யானை ஆண்டாளுக்கு பழங்களை வழங்கி ஆசி பெற்றார். பின்னர் பிரசாரத்தை தொடர்ந்தார்.
பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்யும் அவர், திருச்சி மரக்கடை பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.



