ஓட்டுநா் உரிமத்தைப் புதுப்பிக்கும் காலக்கெடு மேலும் 3 நீட்டிப்பு

ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக் கெடுவை 2021-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவல், பொது முடக்கம் மற்றும் அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக ஏற்கெனவே இதற்கான கால அவகாசம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டு, டிசம்பா் 31-ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. இப்போது, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தோடு, மோட்டார் வாகனங்களின் உரிமம், ஓட்டுநா் உரிமம், வாகன பதிவு ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான காலக் கெடு 2021-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இந்த காலக்கெடு நீட்டிப்பு என்பது 2020 பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 2021 மார்ச் 31-ஆம் தேதி வரை காலாவதியாகும் மோட்டார் வாகன ஆவணங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

எனவே, இந்த தேதிகளில் காலாவதியான வாகன ஆவணங்களை 2021-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை செல்லத் தகுந்த ஆவணங்களாக அதிகாரிகள் கருத்தில்கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகளும், குடிமக்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றவும், கொரோனா பரவலைத் தடுக்கவும் இது உதவும்.