துண்டிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் தலையை துாக்கி வந்த நாய்

துண்டிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் தலையை துாக்கி வந்த நாயிடம் இருந்து, போலீசார் தலையை மீட்டனர். நரபலி கொடுப்பதற்காக தலை துண்டிக்கப்பட்டதா என, விசாரணை நடக்கிறது.

மதுரை, பீபீகுளம் வருமான வரி அலுவலகம் எதிரே ஏ.டி.எம்.,மில் நேற்று பகல் 1:00 மணிக்கு, அய்யனார் என்பவர் பணம் எடுக்க வந்தார்.அப்போது, நாய் ஒன்று குழந்தையின் தலையை கவ்விச் சென்றதை பார்த்து, போலீசிற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து குழந்தையின் தலையை மீட்டனர். சாக்கடையில் இருந்து குழந்தையின் தலையை நாய் எடுத்து வந்தது தெரிந்தது.

யாரேனும், திருட்டு உறவில் பிறந்த குழந்தையை கொன்று வீசினரா என, அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

போலீசார் கூறியதாவது: குழந்தை தலை, ஒரே வெட்டில் துண்டிக்கப்பட்டது போல் தெரிகிறது. நரபலி கொடுப்பதற்காக துண்டிக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம். கள்ளத்தனமாக பிறந்த குழந்தையை அப்படியே விட்டு செல்வர் அல்லது ஏதாவது ஓரிடத்தில் வீசி செல்வர். ஆனால், தலையை துண்டித்து வீச வேண்டிய அவசியம் என்ன. உடல் எங்குள்ளது என விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.