கால்பந்து வீரர் மரடோனா நலமுடன் உள்ளார்… அறுவை சிகிச்சை வெற்றி!

கால்பந்து வீரர் மரடோனாவுக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஓய்வுபெற்ற முன்னாள் கால்பந்து வீரர் டியாகோ மரடோனா மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் நேற்று(நவ.03) அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை மோசமாக இல்லை என்றும், சரியாக சாப்பிடாததால் உடல் பலவீனமடைந்துவிட்டது என மருத்துவர்கள் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், கால்பந்து வீரர் மரடோனாவுக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மரடோனாவின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் லியோபோல்டோ லுக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நாள்பட்ட சப்டுரல் ஹீமாடோமா (ரத்தக்கட்டி) வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.