மின்னணு தண்ணீர் சூடேற்றும் கருவியின் மூலம் மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு

மின்னணு தண்ணீர் சூடேற்றும் கருவியின் மூலம் மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி இறந்த சம்பவம் அயப்பாக்கத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின், மருதம் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயகுமார் (38). இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றிவந்தார். இவரது மனைவி சசிகலா (30).

இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதற்கிடையில், விஜயகுமார் தனது இரு குழந்தைகளை விழுப்புரத்திலுள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தார். மேலும், அவரும், தனது மனைவி சசிகலாவுடன் அங்கு இன்று செல்ல முடிவு செய்திருந்தார்.

இச்சூழலில் வீட்டில் விஜயகுமாரும், சசிகலாவும் வெந்நீரில் குளிப்பதற்தாக குளியலறையில் அலுமினிய பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் மின்சார ஹீட்டரை போட்டு வைத்திருந்தனர். பின்னர், குளிப்பதற்கு சசிகலா முதலில் குளியலறைக்குச் சென்றார். அப்போது, அங்கு ஹீட்டரில் இருந்து மின்சாரம் அவர் மீது பாய்ந்தது.

மனைவியின் சத்தம் கேட்டு விஜயகுமாரும் அங்கு ஓடியபோது, அவர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதன்பிறகு, அவர்களை ஊருக்கு அழைத்துச் செல்ல அவரது வீட்டுக்கு மைத்துனர் சரவண வடிவேல் (26) என்பவர் வந்தார். அப்போது, அங்குள்ள குளியலறையில் விஜயகுமார், சசிகலா இருவரும் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதனைக் கண்டு கதறி அழுத அவரின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். சம்பவம் குறித்து அறிந்த அவர்கள், திருமுல்லைவாயல் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சரவண வடிவேல் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.