நாளுக்கு நாள் தஞ்சையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..!

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 


தஞ்சையில் ஏற்கனவே 14 பள்ளிகளில் மாணவர்கள், ஆசியர்கள்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மேலும் 2 பள்ளிகளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த பள்ளிகள் அரசாங்கம் அறிவித்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்தார்.


இந்த நிலையில், இன்று தஞ்சை மாவட்டம் பூதலூர் தனியார் வேளாண்மை கல்லூரியில் மேலும் 15 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தஞ்சையில் கொரோனா பாதித்த கல்லூரிகளின் எண்ணிக்கை 5ஆகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கை 53ஆகவும் உயர்ந்துள்ளது.