3 ஆம் தவணை தடுப்பூசி கண்டிப்பாக

மருத்துவத் துறையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது வழக்கமான ஒன்று தான். DPT, ஹெபடைடிஸ், போலியோ ஆகிய பல நோய்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது.

அதேபோல் தான் கோவிட் தொற்றுக்கு எதிராகவும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள முதல் இரண்டு தவணைகள் மட்டுமின்றி கூடுதலாக மூன்றாம் தவணை தடுப்பூசி போடுவது உலக நாடுகள் பலவற்றில் தற்போது நடைமுறையில் உள்ளன.

இந்தோனேசியாவில் மருத்துவர்களுக்கும், இஸ்ரேலில் 40 வயதை தாண்டியோருக்கும் 3-ம் தவணை தடுப்பூசி போடப்படுகிறது.

அமெரிக்காவில் பைசர், மாடர்னா ஆகிய 2 தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்புத் திறன் தற்போது வெறும் 66 சதவிகிதமாக குறைந்துவிட்டதால், மூன்றாம் தவணை தடுப்பூசி வழங்கப்படுகிறது. முதல் இரு தவணைகளிலும் எடுத்துக் கொண்ட கோவிட் தடுப்பூசியின் மூலம் உடலில் உருவான நோய் எதிர்ப்புத் திறன் நாட்கள் செல்லச் செல்ல குறைந்து கொண்டே வருவதால் மூன்றாம் டோஸ் அவசியம் என்கிறார் நச்சு உயிரியல் வல்லுநர் ஜெயஸ்ரீ.

இந்தியாவில், தற்போதைய நிலையில், அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி போடுவது முக்கியம் என்கிறார் மருத்துவர் சாந்தி.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இதய நோய், சிறுநீரக பாதிப்பு, புற்று நோய், எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு எப்போதுமே நோய் எதிர்ப்புத்திறன் குறைவு என்பதால் அவர்களுக்கு 3 ஆம் தவணை வழங்க வேண்டியது அவசியம் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் 3 ஆம் தவணை குறித்து அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனவே உரிய ஆய்வு தரவுகளைக் கொண்டு மூன்றாம் தவணையின் தேவை குறித்து ஐசிஎம்ஆர் போன்ற அமைப்புகள் விளக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.