கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை மொத்தம் ரூ.399.93 கோடி வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றை தடுக்க, நிவாரண பணிகளுக்கு செலவிட நிதி திரட்டும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள போதிய அளவு நிதி இல்லாததால், கொரோனா வைரஸ் பாதிப்பை பேரிடர் காலமாக முதல்வர் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இந்த நிலையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஏழை, எளிய மக்களை இன்னலில் இருந்து மீட்க ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதி வழங்குவோரின் விவரங்கள் பத்திரிக்கையில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டப்பிரிவு 80(G)-ன் கீழ் 100% வரிவிலக்கு உண்டு என முதல்வர் பழனிசாமி தெரிவித்து இருந்தார். இதன்படி தொழிலதிபர்கள் தொடங்கி பொதுமக்கள் வரையில் பல்வேறு தரப்பினர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களது நிதியை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் தற்போது தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள தகவலின்படி; 21.7.2020 வரை தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள்,அரசு சார் வாரியங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து மொத்தம் 394 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331 ரூபாய் வரப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, 22.7.2020 முதல் 7.10.2020 வரை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட மொத்த தொகை 399 கோடியே 93 லட்சத்து 3 ஆயிரத்து 366 ரூபாய் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.