Kamarajar Project: காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடி திட்டம்

congress-has-lauded-the-tn-govt-announcement-of-rs-1-000-crore-project-in-kamarajar-name
காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடி திட்டம்

Kamarajar Project: காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடி திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதை தமிழக காங்கிரஸ் கமிட்டி போற்றி பாராட்டி வரவேற்பு தெரிவித்துள்ளது.

காமராஜரின் புகழைப் போற்றுகிற விவகாரத்தில் கருணாநிதியை போலவே ஸ்டாலினும் செயல்படுவதாக புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சட்டப்பேரவை தேர்தலின் போது கொடுத்த 505 வாக்குறுதிகளில் கடந்த 10 மாத காலத்தில் 208 வாக்குறுதிகளை நிறைவேற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். அவரது சாதனைகளைத் தமிழகமே பாராட்டி மகிழ்கிறது. நேற்று சட்டப்பேரவையில் கல்லூரிகளை மேம்படுத்த பெருந்தலைவர் காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடி திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் கல்லூரி கட்டிடங்கள் அதிகளவில் கட்டப்பட்டு தமிழகம் முழுவதும் கல்லூரிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 அன்று தமிழக அரசின் சார்பாக கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டு அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞரைப் போலவே மு.க. ஸ்டாலின் அவர்களும் பெருந்தலைவர் காமராஜரின் புகழைப் போற்றுகிற வகையில் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதைத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் பாராட்டி மகிழ்கிறேன்.

இதையும் படிங்க: Inflation: பாராசிட்டமால் உட்பட 800 மருந்துகளின் விலை உயர்கிறது

சட்டமன்ற கூட்டம் முடிந்தவுடன் அன்று மாலையே 4 நாள் துபாய் பயணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டிருக்கிறார். அவரது முதல் வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு முதலீட்டாளர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுக்க முற்பட்டிருக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு வாரம் கொண்டாடும் அரங்கை திறந்து வைக்க இருக்கிறார். இந்த கண்காட்சியில் இந்தியா உட்பட 192 நாடுகள் பங்கேற்கின்றன. இதன்மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அன்னிய நாடுகளின் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் தீவிர முயற்சி மேற்கொண்டிருப்பதை வரவேற்கிறேன்.

ஆனால், அதேநேரத்தில் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு மீது மத்திய பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து வருகிறது. குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரிடம் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய 19 சட்ட மசோதாக்கள் கவனிப்பாரற்று நிலுவையில் உள்ளன. அரசமைப்புச் சட்டத்தில் பொதுப் பட்டியலில் உள்ள துறைகளைக் கபளீகரம் செய்கிற போக்கை மத்திய பா.ஜ.க. அரசு கையாண்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கை, நீட் திணிப்பு போன்றவற்றின் மூலம் கூட்டாட்சித் தத்துவத்தை பா.ஜ.க. அரசு குழிதோண்டிப் புதைத்து வருகிறது.

எனவே, தமிழகத்தில் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எதிராக பா.ஜ.க. நடத்துகிற ஆதாரமற்ற அவதூறு கருத்துகளைப் பரப்புகிற முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது. தொடர்ந்து நடைபெற்று வருகிற அனைத்துத் தேர்தல்களிலும் பிரதமர் மோடியையும், தமிழக பா.ஜ.க.வையும் மக்கள் நிராகரித்து வருவதைப் போல எதிர்காலத்திலும் நிராகரிக்கவே செய்வார்கள். எனவே, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அரசியல், தமிழகத்தில் எந்த வகையிலும் எடுபடாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: Rain Update: தமிழகத்தில் இன்று14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்