சினேகனின் கார் மோதிய விபத்து – இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணம்

கவிஞர் சினேகனின் கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 16-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சவேரியார்புரத்தில் கவிஞர் சினேகனின் கார் சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இரு சக்கர வாகனத்தில் சென்ற ஊனையூரைச் சேர்ந்த அருண்பாண்டி என்பவர் தலையில் பலத்த காயமடைந்து சென்னை – போரூரில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அருண் பாண்டியன் உயிரிழந்தார் . காரை ஓட்டிச் சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளரும் கவிஞருமான சினேகன் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் மற்றும் விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தற்போது இளைஞர் அருண் பாண்டியன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.