மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் சமூக நீதிக்காக அயராது உழைத்தவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ ராம்விலாஸ் பஸ்வான் அரசியல் மட்டுமின்றி, சமூக நீதிக்காகவும் அயராது உழைத்தவர். ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டவர். 8 முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்குரியவரான பஸ்வான், அங்கு தனது கருத்துகளை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் எடுத்து வைத்தவர். கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாக பழகக்கூடிய பண்பாளர் பஸ்வான்.
பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் ராம்விலாஸ் பஸ்வான். அவரது மறைவு அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், இந்திய திருநாட்டிற்கே பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுவோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் “ என்று குறிப்பிட்டுள்ளார்.