மாமல்லபுரத்தை அழகுபடுத்தாவிட்டால் நடவடிக்கை – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு உரிய நிதி ஒதுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட மத்திய மாநில அரசு செயலர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தை அழகு படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி அமர்வு, மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி  குறித்து ஆய்வு செய்ய தமிழக சுற்றுலா துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மற்றும் தொல்லியல் துறை இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாமல்லபுரம் போன்று 16 சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதுக்கு அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வருகிறீர்கள் இது எங்களது இறுதி கெடு, நான்கு வாரத்திற்குள் உரிய நிதி ஒதுக்கீடு செய்து பதில் அளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட மத்திய மாநில அரசு செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவிடுவோம் என எச்சரிக்கை விடுத்து வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.