சென்னையில் புறநகர் ரயில் சேவை அக்.5-ம் தேதி தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழக அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் புறநகர் ரயில் சேவை தொடங்கும் என அறிவித்தள்ளது. இரண்டு கட்ட சோதனைக்குப் பிறகே ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பணியாளா்களுக்கு மட்டுமே ரயிலில் அனுமதிக்கப்படும் என கூறியுள்ளது.
துறை சார்ந்த அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டலர்களுக்கு மட்டும் டிக்கெட் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே ரயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது. பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறியுள்ளது.
பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு:
திங்கள் முதல் தொடங்கும் ரயிலில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என கூறியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆறு மாதங்களாக புறநகர் ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் லட்சக்கணக்கான மக்கள் புறநகர் ரயில் போக்குவரத்து வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை அனுமதித்த அரசு, பேருந்து சேவைக்கு அனுமதி அளித்த அரசு, மின்சார ரயில்களின் சேவை தொடங்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலானோர் பணிக்குச் சென்று வரும் நிலையில் மின்சார ரயில் இல்லாதது சென்னை மக்களுக்கு மிகவும் சுமையாக உள்ளது.