Corona vaccine: 12 முதல் 14 வயதுடையவர்களுக்கு இப்போதைக்கு தடுப்பூசி போடும் திட்டம் இல்லை

இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு உயர்வு

Corona vaccine: நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுக்க கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது.

தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் இதுவரை 158 கோடியே 4 லட்சத்து 41 ஆயிரத்து 770 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 87 கோடியே 70 லட்சத்து 5 ஆயிரத்து 631 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 66 கோடியே 24 லட்சத்து 20 ஆயிரத்து 800 பேரும் போட்டுள்ளனர்.

தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டபோது முதலில் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடும் பணி கள் தொடங்கியது. அடுத்த கட்டமாக மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன.

இந்த நிலையில் 15 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இந்த பிரிவினரில் 7 கோடியே 40 லட்சத்து 57 ஆயிரம் பேர் உள்ளனர்.

இவர்களில் 3 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 929 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 4 வாரங்களில் அவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது.

இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத இந்த வயது பிரிவினருக்கு இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி போடப்பட்டு விடும். அவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி பிப்ரவரி இறுதிக்குள் போடப்பட உள்ளது. இந்த வயதினர் அனைவரும் பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.