‘ஆகாஷ் எஸ்’ ஏவுகணை வாங்க மத்திய அரசு திட்டம்

மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு புதிய ஊக்கம் அளிக்கும் விதமாக நம் ராணுவத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘ஆகாஷ் எஸ்’ ஏவுகணைகள் மற்றும் 25 அதிநவீன ‘துருவ் மார்க் – 3’ இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

லடாக் போன்ற குளிர் நிறைந்த பகுதிகளில் கூட 25 – 30 கி.மீ., தொலைவுக்கு எதிரிகளின் இலக்கை துல்லியமாக சென்று தாக்க கூடிய ‘ஆகாஷ் எஸ்’ ஏவுகணைகளை டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.

மேலும் ‘துருவ் மார்க் – 3’ என்ற அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆகாஷ் ஏவுகணை மற்றும் 25 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்மொழிவு ராணுவ அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலை கூட்டத்தில் இந்த முன்மொழிவுக்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.