பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பேர் கைது..!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்து ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

2019ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி, கல்லூரி மாணவி ஒருவர் தன்னை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கில், வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இவர்கள் பல இளம் பெண்களை ஆசைவார்த்தை கூறி பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்தது தெரியவந்தது.

இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டு, பின் சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, அருளாணந்தம், ஹேரேன்பால், பாபு ஆகிய 3 பேரை பொள்ளாச்சியில் நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்ட்ட பொள்ளாச்சியை சேர்ந்த 3 பேரையும், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ விசாரணை வளையத்தில், மேலும் 3 சிக்கி இருக்கும் நிலையில், பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், அவர்கள் 3 பேரையும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.