வானில் இன்று தோன்றுகிறது ‘புளூ மூன்’

வானில், ‘நீல நிலா’ தோன்றும் அரிதான நிகழ்வு இன்று(அக்.,31) நடக்கவுள்ளது.

வழக்கமாக, மாதந்தோறும் ஒரு பவுர்ணமி, ஒரு அமாவாசை ஏற்படும். எப்போதாவது, ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி ஏற்படும். அந்த இரண்டாவது பவுர்ணமி, ‘புளூ மூன்’ எனப்படும், நீல நிற நிலா’ என, அழைக்கப்படுகிறது. இது, நீல நிறத்தில் தெரிவதில்லை. மற்ற நாட்களை போலவே தெரியும். ஆனாலும், அறிவியல் ரீதியாக நீல நிலா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அக்., 1ல் பவுர்ணமி வந்தது. இரண்டாவது பவுர்ணமி, இன்று(அக்., 31) இரவு, 8:19 மணிக்கு தோன்றுகிறது. நிலவு தன்னைத் தானே ஒருமுறை சுற்றுவதற்கு, 29.531 நாட்கள் அல்லது 29 நாட்கள், 12 மணி, 44 நிமிடம், 38 வினாடிகள் ஆகிறது. கூடுதல் நேரத்தைச் சேர்க்கும் போது, ஒவ்வொரு, 30 மாதங்களுக்கு ஒருமுறை, ‘நீல நிலா’ நிகழ்வு ஏற்படுகிறது. பிப்ரவரியில், 28 அல்லது 29 நாட்கள் என்பதால் வாய்ப்பே இல்லை. அடுத்த நீல நிலா, 2023 ஆக., 31ல் ஏற்படும்.