பிகார் மாநில அரசுக்கு டிஜிட்டல் இந்தியா விருது!

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசு நலத் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும் மாநில அரசுகளுக்கு ஆண்டுதோறும் டிஜிட்டல் இந்தியா விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் டிஜிட்டல் இந்தியா விருதிற்கு பிகார் மாநில அரசு தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த கரோனா காலத்தில் டிஜிட்டல் முறை மூலம் பிகார் மாநில மக்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தி நடவடிக்கை எடுத்ததற்காகவும் இந்த விருது அறிவிக்கப்பட்டது. பிகாரில் மொபைல் செயலியின் மூலம் 21 லட்சம் மக்களுக்குக்கு நிதியுதவியும், ஒரு கோடியே 64 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என மூன்று மாதங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

காணொலி காட்சி வாயிலாக இன்று டிஜிட்டல் இந்தியா 2020 விருது நடைபெற்றது. இதையடுத்து, பிகார் மாநிலத்தின் சார்பாக பங்கேற்ற அம்மாநில முதலமைச்சரின் முதன்மை செயலாளர் சன்சல் குமார், சுகாதார மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் பிரத்யம் அம்ரித் ஆகியோருக்கு இவ்விருதினை வழங்கி குடியரசுத் தலைவர் கௌரவித்தார்.