வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சில முக்கிய சேவைகளையும் வங்கிகள் ரத்து செய்துள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வரக்கூடிய நிலையில் நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அரசு மற்றும் தனியார் வங்கிகளின் சேவை நேரமும் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.  தினமும் வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், பாஸ்புக் பதிவு மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை மாற்றுதல் போன்ற சேவைகளை வங்கிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ஆதார் பதிவு வங்கிகளில் மேற்கொள்ளப்பட மாட்டாது.

மேலும், காசோலைகள் வங்கியின் கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும், வங்கிக்கு வெளியே அல்லது ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் செக் டெபாசிட் பெட்டகங்கள் வழியாக வாடிக்கையாளர்கள் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு உள்ள வாடிக்கையாளர்கள்  டிஜிட்டல் வங்கி சேவைகளைப் பயன்படுத்தவும்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏடிஎம்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.