நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை

தென் பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.7 என்று பதிவான இந்த பூகம்பத்தினால் நியூஸிலாந்து, நியூகலேடோனியா, வனுவாத்து உள்ளிட்ட பிரதேசங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

முதலில் ரிக்டர் அளவுகோலில் 7.2 என்று கூறப்பட்டது பிறகு 7.5 என்றும் பிறகு 7.7 என்றும் அதிகரிக்கப்பட்டது.

10 கிமீ ஆழத்தில் ஏற்படும் இத்தகைய பெரிய பூகம்பங்களினால் கடலில் சுனாமி பேரலைகள் எழுந்து கடற்கரைகளைத் தாக்கும்.

ஆஸ்திரேலியாவில் சுனாமி ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய வானிலை மையம் உறுதி செய்திருந்தது

“சுனாமி உறுதி செய்யப்பட்டது. லார்ட் ஹோவ் தீவிற்கு ஆபத்து இருக்கிறது” என்று ஆஸ்திரேலிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.வியாழன் நள்ளிரவு அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை 13.20 ஜிஎம்டி நேரப்படி நியு கலேடோனியாவின் கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் 7.7 ரிக்டர் அளவிற்கு பூகம்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து அடுத்த 3 மணி நேரத்தில் சுனாமி பேரலைகள் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டது. பேரலைகள் 0.3 மீட்டர் முதல் 1 மீட்டர் வரை எழும்பும் என்று எச்சரிக்கப்பட்டது.

நியூஸிலாந்து அரசும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று மக்களை எச்சரித்துள்ளது. நியூஸிலாந்தின் தொலை வடக்குத் தீவின் வடக்குப்பகுதிக்கும் தி கிரேட் பேரியர் தீவு, நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது