நடிகை சமந்தாவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகைகள்!

நாக சைதன்யாவை சமந்தா பிரிந்தது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், சமந்தாவுக்கு நடிகைகள் ரகுல் பிரீத் சிங் மற்றும் மஞ்சிமா மோகன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. தமிழில் ஏராளமான படங்களில் நடித்த அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சமந்தா சைதன்யாவை பிரிய உள்ளதாகவும் விவாகரத்து பெற விண்ணப்பித்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. இதற்கு சமந்தாவும் சைதன்யாவும் மறுப்பு தெரிவிக்காததால் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பது உறுதியானது.

இதையடுத்து, கடந்த 2ஆம் தேதி இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரவர் வழியில் செல்ல முடிவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். நாகர்ஜூனாவும், சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து பெறுவதை உறுதி செய்திருந்தார். இவர்களது பிரிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாததாலும் வேறு ஒருவருடன் காதலில் இருப்பதாலும் சைதன்யாவை பிரிந்ததாக சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் சமந்தா இது போன்ற வதந்திகளை கண்டதும் மேலும் மனமுடைந்துள்ளார்.

இது குறித்து சமந்தா, ‘ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி. வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறேன், கருக்கலைப்பு செய்துள்ளேன் என பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. விவாகரத்து வலி மிகுந்தது. இதிலிருந்து மீண்டு வர நேரம் தேவைப்படுகிறது. இனியும் என் மீதான தனிப்பட்ட தாக்குதலுக்கு அனுமதிக்க மாட்டேன். அவர்கள் கூறும் எதுவும் என்னை உடைக்காது என்று பதிவிட்டிருந்தார். சமந்தாவின் நிலையை உணர்ந்த நடிகை ராகுல் பிரீத் சிங், ‘உறுதியோடு இருங்கள் சமந்தா’ என்று கூறியுள்ளார். நடிகை மஞ்சிமா மோகனும் சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கங்கனா ரனாவத்தும் சமந்தாவுக்கு ஆதரவாக பதிவிட்டு இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் படத்தின் தலைப்பு வெளியீடு