அரண்மனை 3 ரிலீஸ் தேதியை அறிவித்தார் நடிகை குஷ்பு

அரண்மனை 3 படம் எப்போது வெளியாகிறது என்ற தகவலை படத்தின் தயாரிப்பாளரான நடிகை குஷ்பு நேற்று அறிவித்தார்.

சுந்தர் சி. இயக்கிய அரண்மனை, அரண்மனை 2 படங்கள் வெற்றி பெற்ற நிலையில், அரண்மனை 3 படத்தை எடுத்தார். குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் படத்தை தயாரித்தது. ஆர்யா, ராஷி கண்ணா, ஆன்ட்ரியா. சாக்ஷி அகர்வால், சுந்தர் சி. மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, குஷ்பு, கோவை சரளா, மனோபாலா உள்பட ஏராளமானவர்கள் நடித்திருந்தனர்.

இந்தப் படம் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாகும் என குஷ்பு நேற்று அறிவித்தார். அரண்மனை சீரிஸ் ஹாரர் காமெடியில் தயாரானவை. அதற்கென தனித்த ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அரண்மனை 3 படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் திரையரங்கில் வெளியான தலைவி, லாபம் படங்கள் ஏமாற்றத்தை அளித்த நிலையில், அக்டோபர் 14-ம் தேதி வெளியாகும் அரண்மனை 3 ரசிகர்களை பெருமளவு திரையரங்குகளுக்கு அழைத்துவரும் என திரையுலகம் நம்புகிறது.

இதையும் படிங்க: தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்தது