வழக்கமான பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி- லதா ரஜினிகாந்த்

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற ரஜினிகாந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுக்கொண்டு சென்னை திரும்பினார். அண்ணாத்த படத்தின் பிரத்யேக காட்சி ரஜினிகாந்துக்காக நேற்று சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டது. படத்தை குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் சென்று பார்த்தார்.

அவர் குடும்பத்தினருடன் சென்றிருந்த படமும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் நேற்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் திடீரென்று அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் நேற்றிரவு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் உடல்நிலை குறித்து திரையுலகினரும், ரசிகர்களும் விசாரிக்க தொடங்கினர். இதுகுறித்து ரஜினிகாந்த் குடும்பத்தினர் கூறும்போது, ‘ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். இது வழக்கமான சாதாரண மருத்துவ பரிசோதனை தான். விரைவில் வீடு திரும்புவார்’ என்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி நடந்தே தான் ஆஸ்பத்திரிக்குள் சென்றிருக்கிறார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றுள்ளனர்.

மேலும் ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை