அபுதாபி விமான நிலையத்தில் டுரோன் தாக்குதல்

drone attack
அபுதாபி விமான நிலையத்தில் டுரோன் தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியின் முசாஃபா பகுதியில், எண்ணெய் நிறுவனம் ஒன்றின் சேமிப்பு கிடங்கு அருகே மூன்று எரிபொருள் டேங்கர் லாரிகள் வெடித்துச் சிதறியுள்ளது. அதேபோல் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமான பகுதியில் தீ பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து இரண்டு இடங்களிலும் ஆய்வு செய்த அந்நாட்டு காவல்துறையினர், சிறிய விமானத்தின் பாகங்களை கண்டெடுத்துள்ளதாகவும், அவை ட்ரோன்களின் பாகங்களாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த ட்ரோன்களின் மூலமே டேங்கர் லாரிகள் வெடிக்கச் செய்யப்பட்டிருக்கலாம் எனவும், விமான நிலையத்தின் கட்டுமான பகுதியில் தீ பற்றவைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் ஹவுதி அமைப்பு, ஐக்கிய அரபு அமீரகத்தில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், அதுதொடர்பான தகவல்களை சில மணிநேரங்களில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹவுதி அமைப்பே ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியிருப்பதாக கருதப்படுகிறது. இதற்கிடையே முசாஃபா பகுதியில் எரிபொருள் டேங்கர் லாரிகள் வெடித்து சிதறியதில், இரண்டு இந்தியர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இந்தியர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டில் அதிபர் அப்தரபு மன்சூர் ஹாடி தலைமையிலான அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் நடந்துவருகிறது. இந்த மோதலில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் படைகள் ஹவுதி அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனையடுத்து ஹவுதி அமைப்பு, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை குறிவைத்து தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது. ஹவுதி அமைப்புக்கு ஈரான் ஆதரவளித்துவருவது குறிப்பிடத்தக்கது.