தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தையை கொன்ற தாய் கைது..!

mother killed her child: தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு கழிவறையின் தண்ணீர் தொட்டியில் பெண் சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கிய போலீசார், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். மேலும், வெளியில் இருந்து யாரேனும் குழந்தையை எடுத்துவந்து கழிவறையில் போட்டார்களா? அல்லது கழிவறையில் பிரசவம் நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமாராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்ததில், ஒரு பெண் சுமார் 30 நிமிடங்கள் கழிவறையில் இருந்துள்ளார். இதன் அடிப்படையில் அப்பெண் யார் என விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அந்த பெண் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே ஆலங்குடி பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி(24) என்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார், பெண்ணிடம் தொடர் விசாரணை நடத்தினர். அதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அப்பெண்ணிற்கு இதுவரை திருமணம் ஆகவில்லை என்றும், அப்பெண் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெணியில் வேலை பார்த்த போது, அங்கு சதீஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டு நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால் ப்ரியதர்ஷினி கர்ப்பமாகியுள்ளார்.

இந்நிலையில், சொந்த ஊர் திரும்பிய பிரியதர்ஷினி வயிற்று வலி என கூறி தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கடந்த 2-ஆம் தேதி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் 4-ம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து கழிவறையில் சென்று குழந்தையை பெற்றெடுத்து தண்ணீர் தொட்டியில் அமுக்கிவைத்துவிட்டு சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்திற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருக்கலாம் என அவர்களையும் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு இடமில்லை- கடம்பூர் ராஜூ